நாகப்பட்டினம் மாவட்டக் குழுவின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள (ராமையாவின் குடிசை இருந்த பகுதி) வெண்மணி நினைவக கட்டிடத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 25 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ண், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில தலைவர் எ.சவுந்ததரராசன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்களின் தலைவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைத்தனர். அரை நூற்றாண்டு கடந்தும் ஆறாரணமாய் நம் கண் முன்னே விரிகிறது கீழத்தஞ்சையில் நிலப் பிரபுத்துவம் செய்த கொடுமைகளும், அட்டூழியங்களும். அன்றிருந்த நிலப்பிரபுக்களையும், பண்ணையார்களையும் நிலைகுலைய வைத்து கதி கலங்க வைத்த ஒற்றைச் சொல் செங்கொடி. ‘பள்ளு பறைக்கு திமிர பாத்தியா’ என்ற எகத்தாளமான சொல்லாடல்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய ஒற்றைச் சொல் கம்யூனிஸ்ட்.எந்த ஊரில் செங்கொடி ஏற்றக்கூடாது என்று சொன்னார்களோ அதே கீழவெண்மணியில் நடுநாயகமாக வானுயர்ந்து 24 மணி நேரமும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது செங்கொடி. ‘ஆண்டைகளே, அரைப்படி நெல் கூலி கூட்டி தாருங்கள்’ என்று கூனிக்குறுகி கெஞ்சிக் கேட்காமல் அரைப்படி நெல் கூலி கூட்டித்தாருங்கள் என்று சரிக்குச் சமமாய் நின்று எங்கள் உழைப்புக்கு கொடுக்கிற உரிமையை தாருங்கள் என்று கேட்பதிலிருந்துதான் அவர்களுக்கான கோபம் பிறக்கிறது.
உழைப்பைச் சுரண்டுகிற எவனுக்கும் அடிபணியாதே என்ற உத்வேகத்தை தந்தது செங்கொடி இயக்கம். அக்கொடியின் கீழ் நின்று தொழிலாளி வர்க்கம் தங்கள் கரங்களை உயர்த்தி கம்பீரமாய் முழங்கியது.அந்த முழக்கங்களே முதலாளி வர்க்கத்தின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் துடித்தார்கள். மனிதனை மனிதனாக நடத்து. இங்கு யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்ற வார்த்தைகள் பண்ணையார்களுக்கு பைத்தியம் பிடிக்க வைத்தன. ‘உன் வீட்டுப் பிள்ளை படிச்சு பெரிய ஆள் ஆயிட்டா, என் வீட்டுப்பிள்ளை மாடு மேய்க்க போவானா ‘என்று பண்ணை அடிமைகள் குழந்தைகளின் கனவை தகர்த்தெறிந்த நிலப்பிரபுக்களின் செவிட்டிலறைந்து விட்டு இளங்கலை, முதுகலை, ஆய்வு படிப்பு, மருத்துவர்,பொறியாளர்,பேராசிரியர் என பண்ணையடிமையாய் இருந்தவர்களின் குழந்தைகள் அரசு அலுவலர் முதல் ஆட்சி பீடத்தின் உயர்ந்த நிலையில் இன்று இருக்கிறார்கள் என்றால் அதற்கு செங்கொடி இயக்கத்தின் தவப்புதல்வர்கள் செய்த தியாகத்தின் உச்ச நிலைதான் காரணம். ஒவ்வொரு தெருமுகப்பிலும் எல்லைச்சாமியாய் ஒரு செங்கொடி பறந்த வண்ணம் உள்ளது.அது காலகாலமாய் அடிமைப்பட்டுக் கிடந்த விளிம்பு நிலை மக்களின் சுதந்திரப் பறவை ஒன்று சிறகடித்துப் பறப்பதை நினைவூட்டுகிறது. ஊருக்கு குடிநீர் வரவில்லையா, சாலை வசதி சரியில்லையா, பேருந்து நிறுத்தம் இல்லையா, அரசு மருத்துவமனை பராமரிப்பு இல்லையா, பயிர்க்காப்பீடு வழங்கவில்லையா, இப்படி மக்கள் சார்ந்த எந்த கோரிக்கையானாலும் கூப்பிடு அந்த செங்கொடி இயக்கக் காரனை.
அப்பதான் நீதி கிடைக்கும் என்று மக்கள் கூறுவதற்கு காரணம், கம்யூனிஸ்டுகள் நடத்திய களப் போராட்டங்கள்தான்.அந்த நீண்ட பயணம் இன்றும் உயிர்ப்புடன் தொடர்கிறது என்றால் நிஜ கதாநாயகர்களான பி.சீனிவாச ராவ், பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி.வீரையன், மணலூர், மணியம்மை என்று போராட்டக் களத்தை வடிவமைத்து கொடுத்த மாவீரர்களால்தான். பல ஊர்களில் கொடிகட்டி பறந்த பண்ணையார்களின் பண்ணை வீடுகளும்,தோட்டங்களும் இன்று பாழடைந்து கேட்பதற்கு நாதியற்று கிடக்கின்றன. ‘வாடா, மாரி மகனே முருகையா’ என்று கூப்பிட்ட அதே வாயால் இன்று வாங்க எம்.எம் என்று தலைப்பு எழுத்தைச் சொல்லி மரியாதையோடு அழைக்க வைத்திருக்கிறது கம்யூனிஸ்ட் இயக்கம். இடுப்பிலும், அக்குள்களிலும் இருந்த துண்டு இன்று தோளில் கம்பீரமாய் கிடக்கிறது. நடந்து செல்வதற்கே பாதை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று டூவீலரில் சென்று அவர்கள் வீட்டு வாசலிலே நிறுத்திவிட்டு போராட்டத்திற்கான நோட்டீசையும் கொடுத்துவிட்டு வருகிறோம் என்றால் கம்யூனிஸ்ட் இயக்கம் கொடுத்த துணிவுதான் காரணம். நண்டு கொழுத்தா வலையில இருக்காதுங்கிற மாதுரி இவனுங்க தலையெடுத்தா நாடு தாங்காது என்று கூலியாட்களுக்கு நில உரிமை பறிக்கப்பட்ட காலம் போய், எல்லா மக்களும் நிலம் வைத்துக் கொள்ள உரிமையும் துணிவும் கொடுத்ததோடு, இன்று பண்ணையடிமைகளாய் இருந்தவர்களின் கையில், எந்த பண்ணையில் தாத்தா பண்ணை அடிமையாய் வேலை பார்த்தாரோ அதே பண்ணை நிலத்தில் பேரன் தனது சொந்த நிலமாக வேலை செய்கிறான். தெருமுகப்பில் நான்கு பேர் நின்று பேசிக் கொண்டிருந்தால் விரட்டி அடிக்கும் காலம் போய் இன்று அநேக ஊராட்சிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் திறக்கப்பட்டு இருக்கிறது.அமர்ந்து தேநீர் பருக,பேப்பர் படிக்க, நடப்பு அரசியல் பேச, அரசியல் வியூகம் வகுக்க,திட்டமிட்டு கடமைகளை ஆற்ற இப்படி சொந்த மண்ணில் ஜனநாயகமாக, சுதந்திரமாகச் செயலாற்ற கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்டுகள் செய்த மகத்தான தியாகம் தான் நாம் தெருவில் நின்று பேச முடிகிறது.
தகித்துக் கொண்டிருக்கும் கீழவெண்மணியின் ஆறா நெருப்பு, மனதளவில் மட்டுமல்ல, மண்டைக்குள்ளும் எரிமலையை வெடிக்கச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று அஞ்சலி செலுத்தும் போதெல்லாம் அபயக்குரல் கிளப்பி கைகளை உயர்த்தியபடியே கரி கட்டைகள் ஆகிப்போன அந்த வீரத் தியாகிகளுக்கு செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்தி, முதலாளி வர்க்கத்தை வேர் அறுத்து தொழிலாளி வர்க்கத்தை இந்த பூவுலகில் வியாபிக்கச் செய்வோம் என்று அந்த தியாகிகளுக்கு முன்னால் சபதம் ஏற்கிறோம். சம உரிமை, கல்வி, சுதந்திரம், பொருளாதாரம் என சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மக்களை மேன்மையுறச் செய்து அவர்களின் பாதுகாப்புக் கேடயமாக விளங்குகிறது செங்கொடி இயக்கம். ஆண்டுக்கு பல லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள், அந்த புண்ணிய பூமியான வெண்மணித் தியாகிகள் நினைவிடத்திற்கு வந்து செல்கின்றனர்.அதே ஊரின் கிழக்கு பகுதியில் உழைப்பாளி வர்க்கத்தை ஒழிக்க நினைத்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் சமாதியோ கேட்பாரற்றுக் கிடக்கிறது. இதுவே சுரண்டும் வர்க்கத்தை உழைக்கும் வர்க்கம் வென்றே தீரும் என்பதற்கு சாட்சியாய் நம் கண் முன்னே நிற்கிறது. கீழத் தஞ்சையின் திரும்பிய திசையெல்லாம் செங்கொடி இயக்கத்திற்கு தங்களை அர்ப்பணித்த வீரத் தியாகிகளின் தியாகத்தால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு தோழரின் வீர வரலாற்றைக் கேட்கும் போதெல்லாம் உணர்ச்சிகரமான உணர்வும், கண்களில் கண்ணீர் ததும்பி செந்நீராய் சிந்தும் நிலையும், கண்கள் சிவக்க கோபக்கனலேறி ‘செங்கொடி வாழ்க’ ‘செங்கொடி வாழ்க’ என முழங்குகிறோம் அந்த மகத்தான வீரத் தியாகிகளுக்கு முன்னால்! -
ஆதி.உதயகுமார், நாகை