புதுக்கோட்டை, ஜூன் 23 -
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 47 ஆவது சர்வதேச அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்திறன் போட்டிகளில் பங்குபெறும் வகையில் தகுதிவாய்ந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நான் முதல்வன் தளத்தின் கீழ் “TN Skills-2023” நடத்தப்படவுள்ளது.
முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜுலை 14 அன்று முதல் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவிலும், அதனைத் தொடர்ந்து மண்டல அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் செப்டம்பரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்கு பெறுவார்கள். மொத்தமுள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
10 வயது நிரம்பிய தனித்திறன் பெற்ற உயர்நிலைக் கல்வி, தொழில்பயிற்சி கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவ சார்பு துறைகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள், தனித்திறன் பெற்றவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழில்பழகுநர் பயிற்சி பெறுபவர்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.