திருவாரூர், ஆக.2 - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக குடவாசலைச் சேர்ந்த எஸ்.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1981 ஆம் ஆண்டு பூண்டி கலைக்கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவராகவும், 1983 இல் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தலைவராகவும் செயல்பட்டு 1989 ஆம் ஆண்டு குத்தாலம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர். 1996-2001 ஆம் ஆண்டு வரை குடவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவராக 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த குடவாசல் எஸ்.தினகரன், தற்போது மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, திருவாரூர் வடக்கு மாவட்டத் தலைவராக ஆவூர் ஏ.முரளீதரனும், தெற்கு மாவட்டத் தலைவராக எடமேலையூர் எஸ்.சந்திரசேகர் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.