districts

தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதை பாஜகதான் தடுக்கிறது

தஞ்சாவூர், ஆக.31 -  காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை பாஜக தான் தடுக்கிறது என்றார் விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர். தஞ்சாவூரில், செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை.  மழை, வெள்ளம், வறட்சி, விபத்து, மணிப்பூர் போன்ற மனித பேரழிவுகள் என மக்களுடைய எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அந்த இடத்துக்கு மோடி செல்வதில்லை. அவர் விழாக்களுக்கு மட்டுமே செல்வார். மக்களுடைய பிரச்சனைகள், சிரமங்களில் பங்கு கொள்ளமாட்டார்.  சந்திராயன்-3 நிலவில் தடம் பதித்தது இஸ்ரோவின் வெற்றி. இந்த அறிவியல் சார்ந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. எனவே, விஞ்ஞானிகள் என்ன பெயர் வைக்க வேண்டும் என நினைக்கின்றனரோ, அதைத்தான் வைக்க வேண்டும். கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன செல்கிறதோ, அதை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது. ஆனால் இதற்கு பாஜக தடையாக இருக்கிறது. கர்நாடக பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர்தான் விவசாயிகளைப் போராட்டத்துக்கு தூண்டுகின்றனர்.  கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுப்பதற்காக அண்ணாமலையும், பசவராஜ் பொம்மையும் போடுகிற இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.