districts

img

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூலை 20 - வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ், இயங்கி வரும் தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  இதில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 2578 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியினை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர்.   கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தேனி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 12 வணிகர்கள் கலந்து கொண்டனர். பருத்தி மறைமுக ஏலத்தில் 350 மெ.டன் அளவு பருத்தி வரப்பெற்றது. ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்சம் ரூ.6939, குறைந்தபட்சம் ரூ.5939, சராசரி ரூ.6552 என விலை நிர்ணயிக்கப்பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.2.27 கோடி. பருத்தி மறைமுக ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி தலைமையில், மேற்பார்வையாளர் சிவானந்த் முன்னிலையில் நடந்தது.  பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 20 குவிண்டால் வந்தது. எள் குவிண்டாலுக்கு ரூ.13000 என்ற அதிகபட்ச விலைக்கும், 5 குவிண்டால் பூங்காறு நெல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3000 என்ற அதிகபட்ச விலைக்கும் விற்பனையானது. மேலும் எள், உளுந்து, பச்சைப்பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்து தரப்படுகிறது.