கரூர், செப்.27 - நல்லாகவுண்டம்பட்டி மக்கள் குடிநீரின்றி தவித்து வருவதைக் கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லாகவுண்டம்பட்டி பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும். குளியல் மற்றும் கழிப்பறையுடன் கூடிய சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்க வேண்டும். நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக அனைவருக்கும் வழங்கியும், சட்டக் கூலி ரூபாய் 319 வழங்கிட வேண்டும். எதிர்காலத்தில் நாகனூர் ஊராட்சியை புதிய பேரூராட்சியில் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.முனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆ.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். வி.ச ஒன்றியத் தலைவர் எம்.அழகேசன் நன்றி கூறினார். முன்னதாக தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து விவசாயிகள் ஊர்வலமாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.