districts

img

காவல் துறையை கண்டித்து சிபிஎம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜன.6-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் திங்கட்கிழமை காவல்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர் பட்டியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை உள்ளே விடாத காவல்துறையினரை கண்டித்தும், மேலும், மனு கொடுக்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அதிகமாக துன்புறுத்தும் வகையில் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர் எனத் தெரிவித்து கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் பி. ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சால் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மாவட்டச் செயலாளராக உள்ள நான், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்றபோது என்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக கட்சியின் சார்பில் நான் வந்துள்ளேன் என கூறிய போது, மாவட்ட ஆட்சியரை சொல்ல சொல்லுங்கள் நான் உங்களை உள்ளே விடுகிறேன் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்.  பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமாக திருட்டு, கொள்ளை என அதிகமாக  நடைபெற்று வருகின்றது,  அதனை காவல்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கட்சியினரையும், மற்ற அமைப்பினரையும், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.  எனவே இதற்கு சரியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.