districts

திருக்கடையூரில் மாடு, குதிரை எல்கை பந்தயம்

மயிலாடுதுறை, ஜன.17- காணும் பொங்கலையொட்டி திருக்கடையூரில் மாடு, குதிரைகளுக்கான எல்கை பந்தயம் செவ்வாயன்று நடைபெற்றது.  மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43 ஆம் ஆண்டு, நாராயணசாமி 10 ஆம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம், காணும் பொங்கல் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை வகித்தார். செம்பனார்கோவில் ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், டி.மணல்மேடு ஊராட்சி மன்றத்தலைவர் திலகவதி துரைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்றார். பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து, அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை போட்டி நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6 கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8 கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது. சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன.  போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் பங்கேற்றன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.