districts

திருச்சி முக்கிய செய்திகள்

பாபநாசம் விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஜூலை 7- தஞ்சாவூர் விற்பனைக் குழுவிற்குட்பட்ட பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.  பருத்தி மறைமுக ஏலத்திற்கு பாபநாசம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மதகரம், சத்தியமங்கலம், வலங்கைமான், கோபுராஜபுரம், அய்யம்பேட்டை உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,230 விவசாயிகள் தாங்கள் விளை வித்த பருத்தியை எடுத்து வந்திருந்தனர்.  கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, விழுப்பு ரம், ஆந்திரா, தெலுங்கானா, தேனி, பண்ருட்டி உள்ளிட்ட  பகுதிகளைச் சேர்ந்த 11 வணிகர்கள் கலந்து கொண்டனர்.  பருத்தி மறைமுக ஏலத்தில் 180 மெ.டன் பருத்தி அதிக பட்சம் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7309, குறைந்தபட்சம் ரூ. 6019, சராசரி ரூ.6820 என விலை நிர்ணயிக்கப் பட்டது. பருத்தியின் மொத்த மதிப்பு ரூ.1.20 கோடி.  இந்த மறைமுக ஏலம் விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் தாட்சாயிணி, வேளாண்மை அலுவலர் தாரா தலை மையில், மேற்பார்வையாளர் சிவானந்த் முன்னிலையில் நடந்தது.  பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாப் பிள்ளை சம்பா பாரம்பரிய நெல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3500  என்ற அதிகபட்ச விலைக்கு விற்பனையானது. பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள், உளுந்து, பச்சைப் பயறு, கொப்பரை மற்றும் பாரம்பரிய நெல் வகைகளும் ஏல  முறையில் தரத்திற்கேற்ப நல்ல விலைக்கு விற்பனை செய்யப் படுகின்றன. 

அடிக்கடி பழுதாகும் மின் மாற்றியை மாற்றுக!
மின் வாரியத்தை கண்டித்து சாலை மறியல்

அரியலூர், ஜூலை 7- மின் மாற்றியை மாற்றி முறையாக மின்சாரம் வழங்காத மின் வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.  இப்பகுதிக்கு மின் விநியோகம் தரக்கூடிய குறைந்த மின் அழுத்தம் உள்ள மின்மாற்றியை, மின்வாரியத்தினர் அடிக்கடி பழுது நீக்கி சீர் செய்து வந்தனர். இருப்பினும் பழுதடைந்த மின்மாற்றியால், கல்லாத்தூர் அண்ணா நகர் பகுதியில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு, மின்சாதனப் பொருட்கள் பழுதடைகின்றன. போதிய மின்சாரம் இல்லாததால் மின் விளக்குகள் எரிவதில்லை. மேலும் நெசவுத்தொழில் செய்ய முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  மின் மோட்டார் மூலம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாததால், குடிநீர் தட்டுப்பாடும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.  இதனால் அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்தை கண்டித்து ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், ‘உடனடியாக புதிய மின்மாற்றி அமைக்க  நடவடிக்கை எடுப்பதாக’ அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க பொறுப்பாளர்கள் கூட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 7 -  மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. பொறையார் காத்தாஞ்சாவடியிலுள்ள டி.இ.எல்.சி சீகன்பால்கு சிறுவர் பூங்கா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத் திற்கு, இயக்கத்தின் மத்திய மண்டல செயலாளரும், சிறுபான்மை நலவாரிய உறுப்பினருமான ஜோசப் ஸ்டாலின்  தலைமை வகித்தார். சிறுபான்மை நல துறையின் திட்டங்கள்,  பழமையான ஆலயங்கள் சீரமைப்பு செய்ய அரசு தரும்  மானியம், ஆலய பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம், நல  வாரியத்தின் மூலமாக  திருச்சபைகள் பயனடையும் திட்டங்கள்  குறித்து ஆலோசனை வழங்கினார்.  அச்சகத் தந்தை அருள்தொண்டர் சீகன்பால்கு-விற்கு முழு உருவச் சிலையுடன் அரங்கம் அமைப்பதாக, தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். சீகன்பால்கு தரங்கம்படி  வந்திறங்கிய நாளான ஜூலை 9 (318 ஆவது ஆண்டு)-ஐ இயக்கத்தின் சார்பாக நினைவுகூர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியரும், எழுத்தாளரு மான மரியலாசர், ஒருங்கிணைப்பாளர்கள் சுதாகர்சாமுவேல், சகாயராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார்.  நாகப்பட்டினம்,  கீழையூர் ஒன்றியச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், சீர்காழி, பூம்புகார் தொகுதி பொறுப்பாளர்கள், ஆலய பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

மணக்காடு அரசுப் பள்ளியில் தாமதமாகும் வகுப்பறை கட்டடப் பணிகள்: விரைந்து முடிக்க பெற்றோர் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 7- பேராவூரணி அருகே, மணக்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளி வகுப் பறை கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபா வாசத்திரம் ஒன்றியம், மணக்காடு  கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக் கான மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். இந்நிலையில் போதிய வகுப் பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வெயில் காலங்களிலும், மழை காலங்களி லும் மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டது.  இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது.  மேலும், இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் கவனத் திற்கும் கொண்டு செல்லப்பட்டது.  இதையடுத்து மணக்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று  ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இரு வகுப்பறை கட்டி டம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.  அதைத்  தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 16  ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா,  சட்டப்பேரவை உறுப்பினர் தலைமை யில் நடைபெற்றது.  இந்நிலையில், கல்வித்துறை, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் அலட்சியத்தாலும், ஒப்பந்ததாரரின் மெத்தனத்தாலும், 6  மாதங்களை கடந்த நிலையில் இது வரை வகுப்பறை கட்டிடம் கட்டப்படா மல் உள்ளது. தரைத்தளம் அமைக்கப் பட்டதோடு சரி, எந்த வேலையும் நடை பெறாமல், பணிகள் ஆமை வேகத்தில்  நடைபெறுவதாக பெற்றோர் தெரி விக்கின்றனர்.  இதேபோல் சட்டப்பேரவை உறுப்பி னர் பரிந்துரையின் பேரில், அதே வளா கத்தில் 6 வகுப்பறை கொண்ட கட்டிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இது எந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப் படவில்லை. இந்த பணியும் அரையும்,  குறையுமாகவே நிற்பதாக கிராமத்தி னர் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதி காரிகள் எவரும் இதை கண்டு கொள்ள வில்லை.  எனவே, மாவட்ட ஆட்சியர் இதனை  நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். மழைக் காலம் தொடங்க உள்ளதால், பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டும்  பணியை விரைந்து முடித்து மாண வர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர  வேண்டும். இல்லாவிட்டால் பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் போராட்டங்களை அறிவிக்க நேரிடும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னரும் சமூக ஆர்வலருமான வீரக்குடி ராசா தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை நோயாளிகள்,  உறவினர்களுக்கு சிற்றுண்டி வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 7-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி  இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி அரசு  மருத்துவமனையில் ஒரு ஆண்டு காலமாக வாரம்தோ றும் ஞாயிற்றுக்கிழமை காலை நோயாளிகளுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் சிற்றுண்டி வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நடப்பு 2024-25 ஆம் ஆண்டிலும்  தொடர்ந்து சிற்றுண்டி வழங்க உள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி முதல் வாரமாக ஞாயிற்றுக் கிழமை காலை பேராவூரணி அரசு மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு சத்துள்ள காலை சிற்றுண்டி வழங்கப் பட்டது.  இந்நிகழ்விற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ்  தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளர் எம்.நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் வ.பாலசுப்பிரமணியன், சாசன பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை, முதல் துணைத் தலைவர் ஜி.வி.ராஜ்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சங்கச் செயலாளர்கள், முன்னாள் செய லாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கல்லுக்கால் ஊன்றும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி உறவினர்கள் சாலை மறியல்

அறந்தாங்கி, ஜூலை 7- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த  இடையன்காடு கிராமத்தில் உள்ள எம்.எஸ்.எம் என்பவர் வீட்டில் வியாழனன்று காலை 10 மணியளவில், கல்லுக் கால் ஊன்றும் பணி நடைபெற்றது.   அதில் செவிடன்காடு கிராமத்தைச் சேர்ந்த விஜய்  ஆனந்த் என்பவர் கல்லுக்கால் ஊன்றிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராவிதமாக தரைப் பகுதியில் சென்ற மின்சா ரம் மீது கடப்பாரை கம்பி பட்டு, விஜய்ஆனந்த்-ஐ மின்சாரம்  தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்த னர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கூறியதால், உறவி னர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உறவினர்கள் மறியல் இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், “எம்.எஸ்.எம் சுல்தான் என்பவரது வீட்டில் வேலைக்காக சென்ற வரிடம் தரைப் பகுதியில் மின்சாரம் செல்கிறது என்ற தகவலை சொல்லாதது தான், இந்த விபத்துக்கு காரணம்  என குற்றம் சாட்டுகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்தவ ருக்கு உரிய இழப்பீடும், வீட்டின் உரிமையாளர் மீது கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும்” எனக் கோரி  அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு உறவி னர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் வட்டாட்சியர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையா ளர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இலவசமாக வண்டல் மண் எடுக்க  இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி, ஜூலை 7- நெல்லை மாவட்ட  ஆட்சியர்  கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இயற்கை வளங்கள் துறையால் குறிப்பிட்டுள்ளவாறு “பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் பராமரிப்பில் உள்ள கண்மாய், குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண்,வண்டல்மண் வெட்டி எடுப்பதற்காக தகுதி வாய்ந்த 952 குளங்கள் கண்டறியப்பட்டு நெல்லை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீட்டின்படி அறிவிக்கை செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில் விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 கனமீட்டர் அளவும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்து வதற்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. எனவே இச்சலுகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான 10(1) சிட்டா அடங்கல் மற்றும் புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும், உரிய படிவத்தில் இ-சேவை மையம் மூலமாகவோ, tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாகவோ சம்பந்தப்பட்ட வருவாய் தாசில்தாருக்கு. விண்ணப்பித்து மண் வெட்டி - எடுத்து செல்ல அனுமதி பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.