districts

img

கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீர்

மயிலாடுதுறை, ஜன.23 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் அனந்தமங்கலம்-ஒழுகைமங்கலம் பகுதிக்கு இடைபட்ட பகுதியான எருக்கட்டாஞ்சேரி செல்லும் சாலை அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி அப்பகுதி குளம்போல காட்சியளிக்கிறது. நான்கு வழிச்சாலை பணிக்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டிய போது, குடிநீர் குழாய் உடைந்து விட்டதாகவும், அதை சரிசெய்யாமல் மண்ணை அள்ளிப்போட்டு சென்று விட்டதால், தொடர்ந்து குழாயிலிருந்து தண்ணீர் வீணாகி வருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தரங்கம்பாடி, சந்திரபாடி போன்ற கடலோர கிராமங்களுக்கு உடைப்பு ஏற்பட்ட இந்த குழாய் வழியாக குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைப்பை சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.