districts

img

தனிப்படை காவலர்களால் திருப்புவனத்தில் இளைஞர் அடித்துக்கொலை! சிபிஎம் கண்டனம் !

தனிப்படை காவலர்களால் திருப்புவனத்தில் இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அளித்துள்ள அறிக்கை வருமாறு:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோயிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர். காவல்துறையினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அஜித்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளிகோயிலுக்கு நேற்று முன்தினம் சிவகாமி என்பவர் தனது மகளுடன் கோயிலுக்கு காரில் வந்துள்ளார், காரை கோயிலின் தற்காலிக பணியாளரான அஜித் அவர்களிடம் பார்க்கிங் செய்ய சொன்னதாகவும், அவர் தனக்கு கார் ஓட்டத் தெரியாததால் மற்றொரு நபர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்ததாகவும். கோயிலுக்குச் சென்று திரும்பிய சிவகாமியும் அவரது மகளும் திரும்புவும் காரை எடுத்த போது காரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை என்று அஜித் அவர்களிடம் கேட்டதாகவும் அதற்கு அஜித்  தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன் அவர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிகிறது.

புகாரின் பேரில் காளிகோயிலின் தற்காலிக ஊழியர் அஜித் அவர்களை தனிப்படை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச்சென்று காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு, தங்களது வாகனத்தில் வைத்தே சுற்றியுள்ளனர். நகை மற்றும் பணத்தை தான் எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக கூறிய பிறகும் சரமாரியாக ஆறு காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர். பிறகு, காளிகோயிலுக்கு பின்புறம் ஆட்டோவில் அழைத்துச்சென்று அங்கேயும் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆட்டோவிலேயே அஜித் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அஜித்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று, பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.  அஜித் அவர்களின் வீட்டிற்கு வந்து நகை இருக்கிறதா என்று சோதனை செய்து அவரது  தம்பி நவீனையும் காவல்நிலையத்திற்கு சென்று அவரையும் அடித்துள்ளனர்.

தற்போது அஜித் குடும்பத்தினரும், பொதுமக்களும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அஜித் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அஜித் மரணத்திற்கு காரணமாக இருந்த காவலர்கள் அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அஜித் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அஜித்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்துகிறது.   இனிமேல் இதுபோன்ற லாக்கப் மரணங்கள் ஏற்படா வண்ணம் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.