கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கருப்புக்கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம்
கும்பகோணம், பிப்.13- கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கருப்புக்கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோட்டையூர் பகுதியில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இங்கு நெல், பருத்தி, தானிய வகைகள் ஏலத்திற்கு விடப்படும். இந்த நிலையில் இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்ட கருப்புக்கவுனி நெல், விற்பனை ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரிய மாலினி, வேளாண் அலுவலர்கள் கவிதா, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கொண்டு வந்த 500 கிலோ கருப்புக்கவுனி நெல் ஏலம் விடப்பட்டது. ஒருகிலோ ரூ.70 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்தம் ரூ.35 ஆயிரத்துக்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இதுகுறித்து, விற்பனைக் கூட அதிகாரிகள் கூறுகையில், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பாரம்பரிய நெல்லை விற்பனைக்குக் கொண்டு வரலாம். இயற்கை வேளாண் முறையில் விளைவிக்கப்படும் விளை பொருட்களான நெல், உளுந்து, பயறு, எள், நிலக்கடலை, தேங்காய் உள்ளிட்டவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து, அதிக விலைக்கு விற்று லாபம் பெறலாம் என தெரிவித்தார்.
சாலை நடுவே நீர் தேக்கத் தொட்டி! இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
பாபநாசம், பிப்.14- அய்யம் பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கணபதி அக்ரஹாரம் காவிரி பாலம் அருகில் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி பயன்பாட்டில் உள்ளது. அருகிலேயே புதிதாக நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டும், அது பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதுடன், சாலை நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள நீர் தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். மேலும், இதேபோன்று கணபதி அக்ரஹாரம் காவிரி பாலத்தில் இரவு நேரத்தில் இருளாக இருப்பதால், சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, காவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இதேபோன்று கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையில் பொது மக்களின் சிரமத்தை உணர்ந்து நிழற்குடை அமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். இங்குள்ள ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும். கணபதி அக்ரஹாரத்தில் சாலையோரம் குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
வணிகர்களுக்கு பாதுகாப்புக்குத் தரும் அரசியல் கட்சிக்கு ஆதரவு: ஏ.எம்.விக்கிமராஜா பேட்டி
புதுக்கோட்டை, பிப்.13- வணிகர்களின் பாதுகாப்புக்கு உறுதி தரும் அரசியல் கட்சிக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார். புதுக்கோட்டையில் அவர், புதன்கிழமை இரவு பேட்டியளித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் ஒருகோடி வாக்குகள் எங்களிடம் உள்ளன. வணிகர்களின் பாதுகாப்புக்கு உறுதி தரும் அரசியல் கட்சிக்கு, நிர்வாகிகளுடன் பேசி ஆதரவு தெரிவிப்போம். வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் நடத்தும் வணிகர் மாநாட்டை இந்த ஆண்டு, வணிகர் அதிகாரப் பிரகடன மாநாடாக அறிவிப்போம். கட்டட வரி, குப்பை வரி, தொழில் வரி, தொழிலாளர் வரி போன்றவற்றைக் குறைக்க வேண்டும். வணிகர் உரிமம் என்பது எங்களுக்கான அடையாளம். ஆனால், அந்த உரிமத்தைக் கொடுப்பதற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனை அரசு வருவாயாகக் கருதக் கூடாது என்றார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
புதுக்கோட்டை, பிப்.13- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.21 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கஞ்சா வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்
புதுக்கோட்டை, பிப்.13- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடந்த ஜன.11-ஆம் தேதி 320 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக, அம்மாபட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த கமல்பாட்சா மகன் பாவா பக்ருதீன்(30), ஆவுடையார்கோவில் அதிராமங்கலத்தைச் சேர்ந்த சபாபதி மகன் மாரிமுத்து(69) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பரிந்துரைத்திருந்தார். இந்தப் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மு.அருணா புதன்கிழமை உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை, பிப்.13- 2013 ஆம் ஆண்டு நடந்த கொலைச் சம்பவத்தில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த கிராமத் தலைவர் பெரிய கருப்பன் மகன் குமார்(50). கடந்த 2013 ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி அதிகாலை நடைப் பயிற்சியின் போது வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்த கே.புதுப்பட்டி காவல்துறையினர், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் கணபதி(55), சண்முகம் மகன் கார்த்தி, பெரிய கருப்பன் மகன் சின்னராஜா, காசி மகன் வடிவேல் மற்றும் 4 பேர் என மொத்தம் 8 பேரைக் கைது செய்தனர். நீண்டகால குடும்பப் பகையின் காரணமாக, இவர்கள் குமாரை கொலை செய்தது புலன்விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.எம்.வசந்தி புதன்கிழமை தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளியான கணபதிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும், கார்த்தி, சின்னராஜா, வடிவேல் ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதில், ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கணபதி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிற குற்றவாளிகள் 3 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் செயலாளர் எம்.கே.எம். காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளான பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துவிட்டது. தமிழ்நாடு கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் 2025 ஆம் ஆண்டு 10,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தவுடன் ஒற்றுமை சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். இந்த கல்வி ஊக்கத்தொகை காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் (எந்த சங்கத்தில் இருந்தாலும்) பொருந்தும். உறுப்பினர்கள் இல்லாமல் சிறிய, பெரிய அளவில் வியாபாரிகளாக இருந்தாலும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களாக இருந்தாலும், பாரம் ஏற்றும், இறக்கும் அனைத்து தொழிலாளர்களாக இருந்தாலும், காந்தி மார்க்கெட்டைச் சுற்றிலும் தள்ளுவண்டிகள், கை வண்டிகள், பூ, பழம், காய்கறி, டீ, டிபன் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும், மீன் மார்க்கெட், உருளைக்கிழங்கு மண்டி, வாழைக்காய் மண்டி புதிய வெங்காயமண்டி, நெல்பேட்டை தெரு, பழக்கடை லைனில் வியாபாரம் செய்வார்களாக இருந்தாலும், அனைத்து சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரிக்க்ஷா, கைவண்டி, ஆட்டோ, வேன்கள் ஓட்டுநர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் அனைவருக்கும் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைத்து குடும்பங்களிலும் கல்வி வளர வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபின் 80 சதவீதத்திற்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு செயலாளர் எம்.கே.எம்.காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.
ஆட்சேபணை இல்லா சான்று வழங்காத வங்கி: ரூ. 1.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
தஞ்சாவூர், பிப்.13 - ஒரு முறை தீர்வின் மூலம் கடனைத் திரும்பச் செலுத்தியவருக்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்காததால், பாதிக்கப்பட்ட முறையீட்டாளருக்கு வங்கி ரூ.1.10 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூர் அருகே, சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் பெ.தமிழரசன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், கல்லூரி படிப்புக்காக தஞ்சாவூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.50 ஆயிரம் கல்விக் கடன் வாங்கினார். இக்கடன் நிலுவையில் இருந்த நிலையில், தமிழரசனை வங்கி மேலாளர் அழைத்துப் பேசி, ஒரு முறை தீர்வின் கீழ் ரூ.20 ஆயிரம் செலுத்தி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதன்படி, தமிழரசன் 2023, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரூ.15 ஆயிரமும், செப்டம்பர் 25 ஆம் தேதி ரூ.5 ஆயிரமும் செலுத்தி தனது கல்விக் கடன் முழுவதையும் முடித்துக் கொண்டார். ஆனால், வங்கி மேலாளர் தரப்பினர் ஆட்சேபணை இல்லா சான்றை வழங்கவில்லை. இது தொடர்பாக, வங்கி மேலாளர் தரப்பினரை பல முறை அணுகி கேட்டும், அவர் தரவில்லை என்றும், ஒரு முறை, தன்னை மேலாளர் அவமானப்படுத்தும் வகையில் பேசிவிட்டார் எனவும், இதனால் ஏற்பட்ட இழப்புக்கு வங்கி மேலாளர் இழப்பீடாக ரூ.25 லட்சமும், ஆட்சேபனை இல்லா சான்றும் வழங்க வேண்டும் என்றும் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் தமிழரசன் 2024, நவம்பர் 11 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே. வேலுமணி விசாரித்து, வங்கியின் சேவைக் குறைபாடு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல், துன்பம், பொருள் இழப்பு, வேறு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற முடியாத சூழ்நிலை ஆகியவற்றுக்காக தமிழரசனுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ.1 லட்சமும், செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் சேர்த்து வங்கி தரப்பினர் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.
திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியின் செல்போன் திருட்டு
திருச்சிராப்பள்ளி, பிப்.13- திருச்சி பாலக்கரை ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(58). இவர், திருச்சி தெப்பக்குளம் தபால் அலுவலகத்தில் தபால் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள். ஈடுபட்டிருந்த போது அவர் தனது 2 செல் போன்களை அங்குள்ள மேஜை மீது வைத்திருந்தார். அப்போது தபால் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒரு மர்ம ஆசாமி அங்கிருந்தவர்களின் கவனத்தை திசைதிருப்பி தங்கராஜ் வைத்திருந்த 2 செல்போன்களையும் திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.