districts

திருச்சியில் இன்று பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம்

திருச்சிராப்பள்ளி, செப்.17 - தமிழக முதலமைச்சரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை முகாம் மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாம்களின் முக்கிய நோக்கமானது மாணவர்களை உயர்கல்வி அல்லது திறன் பயிற்சிக்காக ஊக்குவித்தல் ஆகும்.  திருச்சி மாவட்டத்தில் புதனன்று (18.9.2024) தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் இம்முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. முகாம் காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறும். முகாமில் உயர்கல்வியின் முக்கியத்துவம், எவ்வாறு உகந்த கல்வி படிப்பினை தேர்ந்தெடுப்பது, வேலை வாய்ப்பினை பெறுவது தொடர்பாக எடுத்துரைக்கப்படும். அறிவியல் மற்றும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டல்களையும், தங்கள் நிறுவனத்திற்கான மாணவர்கள் சேர்க்கையையும் மேற்கொள்ள உள்ளனர். மேலும் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வங்கி கடனுதவி தொடர்பாக அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். வங்கிக் கடன் உதவித்திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக முன்னோடி வங்கி அலுவலர்கள் எடுத்துரைக்க உள்ளனர். அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து மகளிர் திட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகியோர் எடுத்துரைக்க உள்ளனர். மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கிறார். எனவே 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி பெற்ற மாணவர்கள் புதனன்று தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு கல்லூரியில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.