காலமானார்
கரூர், பிப்.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கா.கந்தசாமியின் தாயார் கா.வள்ளியாத்தாள் (84) செவ்வாய்க்கிழமையன்று க.பரமத்தியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, தீக்கதிர் முதன்மை பொதுமேலாளர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சச்சி தானந்தம், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெய பால், மதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் ஆசை சிவா, முன்னாள் மாவட்டச் செயலாளர் கபினி சிதம்பரம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சிறைவாசிகளுக்கு மருத்துவ முகாம்
புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறைக்கண்காணிப்பாளர் சி.கிருஷ்ணகுமார் முன்னி லையில் புதன்கிழமையன்று சிறைவாசிகளுக்கு தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவ மனை உதவி மருத்துவர் பிரவீன் மற்றும் சிறையின் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் முகாமை நடத்தினர்.
உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம் வேளாண்துறை விளக்கம்
தஞ்சாவூர், பிப்.16- 25 விழுக்காடு கூடுதல் மகசூல் பெற உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம் என சேதுபாவா சத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப் பட்டுள்ள உளுந்து பயிரில் 25 விழுக்காடு வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். 1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊற வைத்து நன்கு கலக்கி விட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு அத்து டன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். தரமான மணிகளாக, 35-ஆவது நாள் பூக்கும் தரு ணத்தில் 1 முறையும், 45-ஆவது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் 1 முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்க வேண்டும். எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி. கரைசல் தெளித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை, பிப்.16- புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் வீரமணி(29). இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ஏமாற்றி, பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கருவுற்றார். இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், வீரமணியைக் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. விசாரணையில், வீரமணிக்கு போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 366 (ஏ) பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் சிறைத்தண்ட னையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை ரூ.2.20 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் மாவட்ட நீதிபதி ஆர்.சத்யா புதன்கிழமை தீர்ப்பளித்தார்.
கழிவுநீரை பொது இடங்களில் விடக்கூடாது தஞ்சசை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
தஞ்சாவூர், பிப்.16- வீடுகளில் தனியார் வாகனம் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் விட்டால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாந கராட்சி ஆணையர் சரவணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர், வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் இதர வகைக் கட்டிடங்களில் இருந்து, தனி யார் கழிவுநீர் வாகனங்கள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரை, மாநகராட்சி க்கு சொந்தமான சாலைக்காரத் தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில், சுத்திகரிப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் மட்டுமே கழிவுநீரை விட வேண்டும். அனைத்து லாரி உரிமையா ளர்களும் சாலைக்காரத் தெருவில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்வ தற்காக ஒதுக்கப்பட்டுள்ள கிணற்றில் கழிவுநீரை விடுவிக்க வேண்டும். பொதுவெளியில் கழிவுநீரை விடக் கூடாது. ஆனால் பல வாகனங்களில் இருந்து பொதுஇடங்களில் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில் கழிவுநீர் பொது இடங்களில் விடப் பட்டால் மாநகராட்சி மூலம் கடும் நட வடிக்கை மேற்கொள்ளப்படும். தவறும்பட்சத்தில் அபராதம் விதிக் கப்படுவதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்’’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மாதர் சங்க பேரவை
திருவாரூர், பிப்.16- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய ஜனநாயக மாதர் சங்க பேரவை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ச.மைனாவதி தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பா.கோமதி, மாவட்டத் தலைவர் எஸ்.பவானி ஆகியோர் பேசினர். பேரவையில், மாதர் சங்க ஒன்றியச் செயலாளராக ச.மைனாவதி, ஒன்றிய தலைவராக ஜோசப் மேரி, பொருளாளராக உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பேரளத்தில் இருந்து என்னக்குடி வரை மிக மோசமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நேரில் குறைகேட்பு ஒன்றியத் தலைவர் அறிவிப்பு
மயிலாடுதுறை, பிப்.16- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கே.எஸ்.கிருஷ்ணன் பேசும் போது, பரசலூர் கிராமத்தில் உட்புற சாலைகளை தார்சாலையாக அமைக்க வேண்டும், குறிப்பாக கலைஞர்நகர், திருவள்ளுவர் தெரு,முத்துநகர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்க வேண்டும், மேலும் மகாராஜபுரம் அங்கன்வாடி மையக்கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார். ஒன்றியக் குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள குறைகளை நேரில் சென்று பார்வையிட்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
காப்பகத்தில் சேர்க்க கோரிக்கை
தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த குண்டாமரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 39 வயது நபர். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாகவே, பேராவூரணி கடைவீதியில் சுற்றித் திரிகிறார். இவர் திடீரென சாலையில் குறுக்கும், நெடுக்கமாக ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் இவர் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து வன்முறையில் ஈடுபடுகிறார். நகரில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் ஏறி ஓடுவது என அட்டகாசம் தொடர்கிறது. இந்நிலையில் சமூக அலுவலர் ஒருவர் இவரை மீட்டு மனநலக் காப்பகத்தில் சேர்த்த நிலையில், மீண்டும் அங்கிருந்து தப்பி வந்து கடைவீதியில் சுற்றித் திரிகிறார். இவரது குடும்பத்தினர் எவரும் இதனை கண்டு கொள்வ தில்லை எனத் தெரிகிறது. எனவே, உடனடியாக அவரை மீட்டு, மனநலக் காப்பகத்தில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ச்சிப் பணிகளை மயிலாடுதுறை ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை, பிப்.16- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி புதனன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணியினை ஆட்சியர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆட்சியர் மகாபாரதி தலைமையில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அதிகாரிகளிடம் வளர்ச்சித் திட்டப் பணிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். அரசின் வீடுகள் கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, பிப்.16- திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்ததும். முதிர்வுத்தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், விண்ணப்பித்தபோது, வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்படி 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்று சான்றிதழ் நகல், ரேசன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் முதிர்வுத் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திருச்சி என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் பயிற்சி பட்டறை
தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கணிணி அறிவியல் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்விற்கு, மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். திருச்சி, ரோபசன் ரோபோடிக்ஸ் நிறுவனர் முகமது இம்தியாஸ், மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர் ஜெனித்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு ஐஓடி பற்றிய செய்முறை பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சியில் மருதுபாண்டி யர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணைமுதல்வர் ரா.தங்கராஜ், ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். பயிற்சியில், 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வைக்கோல் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை துண்டானது
தஞ்சாவூர், பிப்.16- தஞ்சாவூரை அடுத்த உச்சிமான்சோலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் நவீன் (19). இவர் வியாழக்கிழமை தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை நடுநிலைப்பள்ளி அருகே ஒரு வயலில் வைக்கோல் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வைக்கோல் கட்டும் இயந்திரத்தில் சிக்கிய சணலை நவீன் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நவீனின் இடதுகை இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அவருடைய கை துண்டாகி விழுந்தது. அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அதன்பேரில் துண்டான கையுடன், நவீன் ஆம்புலன்சு வாகனம் மூலம் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவங்கு அவருக்கு துண்டான கையை பொருத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுந்தொழில் தொடங்க கடன் வழங்கல் ஆட்சியர் தகவல்
பெரம்பலூர், பிப்.16- பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் தொடங்குவதற்கும், விரிவாக்குவதற்கும் மாவட்ட தொழில்மையத்தின் மூலம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல், உண்ணத்தக்க நிலையில் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் செய்யவும் மானியத்துடன் கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89255 33976, 89255 33977 என்ற தொலைபேசியிலோ அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில், பெரம்பலூர் - 621212 முகவரியிலுள்ள அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.