தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.4.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெறுகிறது என தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு வந்தவுடன், டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர் வாரத் தொடங்கி, மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: கரும்புக்கான வெட்டுக் கூலி டன்னுக்கு ரூ. 500 மானியம் வழங்குவது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். பெரமூர் ஆர்.அறிவழகன்: கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை அலுவலர்கள்: மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பெய்த தொடர் மழை, பெஞ்சால் புயலால் 2 ஆயிரத்து 326 ஏக்கர் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட 1,227 விவசாயிகளுக்கு சுமார் ரூ. 1.60 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல், கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் 4 ஆயிரத்து 402 ஏக்கர் பாதிக்கப்பட்டது. இதற்காக 1,240 விவசாயிகளுக்கு சுமார் ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரிரு வாரங்களில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்கான பணி நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த டிசம்பர் 11, 12, 13 ஆம் தேதிகளில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அந்த நிதி வந்ததும் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பூதலூர் பாஸ்கர்: நூறு நாள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், பாதிக்கப்பட்டுள்ளனர். கூத்தூர் கே.எம். ரெங்கராஜன்: நடுப்படுகை கிராமத்தில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாகின்றன. இவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாச்சூர் ஆர். புண்ணியமூர்த்தி: குறுவை, சம்பா பருவத்தில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால், கோடை சாகுபடி செய்வதற்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். வெள்ளாம்பெரம்பூர் துரை. ரமேஷ்: பிப்ரவரி 27, 28 ஆம் தேதிகளில் மழை பெய்யும் எனக் கூறப்படுவதால், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க கூடுதலாக தார் பாய் வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.