தஞ்சாவூர், பிப்.6- தஞ்சாவூரில் புதன்கிழமை மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், 3 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி வேனை காவல் துறையினர் நிறுத்தி சோதனையிட்டனர். இதில், தலா 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, மினி வேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான பாபநாசம் அருகே காவலூர் தோட்டத்தைச் சேர்ந்த என். சீனிவாசன் (28), தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஜெ. செல்வபிரகாஷ் (26), மெலட்டூர் அருகே அத்துவானப்பட்டியைச் சேர்ந்த எல்.தாமோதரன் (31) ஆகியோரை கைது செய்தனர். காவல் துறையினர், இவர்களிடம் நடத்திய விசாரணையில் திட்டை, பாபநாசம், மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, மீன் மற்றும் கால்நடை பண்ணைகளுக்கு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இது தொடர்பாக, மேலும் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.