districts

img

குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு விநியோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

அறந்தாங்கி, ஜன. 5 - தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தை பொங்கல் திருநாள், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என சிறப்பாக நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பெற்றிருப்பது ஒரு வருட பயிரான செங்கரும்பு. இரண்டு வருடமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து பொது விநியோக திட்டம் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு அரசு கரும்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் 50 ஏக்கருக்கு மேலாக பொங்கல் கரும்பு விவசாயம் செய்து வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் கரும்பு விவசாயம் செய்துவந்தனர். இந்த வருடம் நல்ல விளைச்சலை கண்டு உள்ளதாகவும், போதிய நேரத்தில் மழை இருந்ததால் கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டிருப்பதாகவும், அதனை அரசு கொள்முதல் செய்வதும் விவசாயிகளிடையே  மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.  சென்ற ஆண்டை விட இந்த வருடம் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாயை  அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதில், இடைத்தரகர்கள் இல்லாததால் தங்களுக்கு தொகை நேரடியாக கிடைக்கும் என்று விவசாயிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.  இதேபோல் ஆண்டுதோறும் அரசே கொள்முதல் செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர். அரசு கொள்முதல் செய்தது போக, மீதம் இருக்கும் கரும்புகளை பொங்கல் நேரத்தில் விற்பனை செய்ய வியாபாரிகளிடம் கொடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.