தஞ்சாவூர், ஏப்.21 - தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு ரூ.4.11 கோடி வழங்கப்படும் என செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர், நிதித்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு, பேரவை, ஆசிரியர், பணியாளர் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை 2022- 2023 ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகளில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள், ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்ய ரூ.2.11 கோடியும், தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் உயர் புள்ளிகளைப் பெற்றிட தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், சிறப்பு சீர்காப்புப் பணிகள் மற்றும் பேராசிரியர்களின் ஆய்வுக்கான அடிப்படை நிதி நல்கைக்கும் தொடராச் செலவினமாக ரூ.2 கோடியும் வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழ்ப் பண்பாட்டு மரபுகள், தமிழ் மண்ணின் மரபுக் கலைகளை மீட்டெடுத்தல், நாட்டுப்புறவியல் துறையை மேம்படுத்துதல், நாட்டுப்புறவியல் அருங்காட்சியகம் அமைத்தல், சிலப்பதிகாரம் காட்டும் இசை ஆடல் அமைதிகளை மீட்டுருவாக்கி ஆவணப்படுத்துதல், கல்வெட்டுகள் காட்டும் தமிழ்க் கலைப் பண்பாடு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளுதல், கைவினைப் பொருட்கள் உருவாக்கிடத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல், நூல்கள் வெளியிடுதல், கருத்தரங்கு நடத்துதல் ஆகிய திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும். இதற்கெனத் தொடராச் செலவினமாக ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், சிறப்புச் சீர்காப்புப் பணிகள் மற்றும் பேராசிரியர்களின் ஆய்வுக்கான அடிப்படை நிதி நல்கை ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.