districts

தென்னை தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் வேளாண்மை உற்பத்தி ஆணையர் தகவல்

தஞ்சாவூர், டிச.31-  தென்னைத் தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என  வேளாண்மை உற்பத்தி ஆணையர் தெரிவித்துள் ளார்.  தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் தென்னை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டு திட்டம் முக்கியமானதாகும். தென்னை மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் அடைந்தால் இந்த  திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை யாக வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. பகுதியாக ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சம்,  மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம், தற்காலிக முழு உடல் ஊனத்திற்கு ரூ.18  ஆயிரம், உதவியாளர் செலவுக்கு ரூ.3 ஆயிரம்,  ஆம்புலன்ஸ் செலவுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் இறுதி சடங்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய ஆண்டுக்கு ரூ.375 செலுத்த வேண்டும். இதில் தொழிலாளர்கள் ரூ.94 மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையான 281 ரூபாயை தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும்.  விருப்பமுள்ள பயனாளிகள் தென்னை வளர்ச்சி வாரியத்தின் இணையதள முகவரியான  http:// www.coconutboard.gov.in-ல் பெயர், ஆதார் எண், செல்போன் எண், இருப்பிட முகவரி, பிறந்த தேதி, வாரிசு நியமனம் உள்ளிட்ட விவரங்களுடன் வட்டார வேளாண்மை அலுவல ரின் சான்றிதழ் பெற்று, காப்பீட்டு தொகையை வரைவோலையாகவோ, கூகுள் பே, பேடிஎம்  அல்லது போன் பே மூலமாகவோ செலுத்தலாம்.  மேலும் விவரங்களுக்கு வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகலாம்’’ எனக் கூறப்பட்டு உள்ளது.