districts

img

அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டி தஞ்சையில் தொடங்கியது

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட  பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சை மாநகராட்சி இணைந்து நடத்தும் 11ஆவது சீனியர் அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டி தொடக்க விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா  உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்து சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனை கள் பங்கேற்கின்றனர்.  பிப்.3 முதல் 5ஆம் தேதி வரை நடை பெறும் போட்டியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் 60 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான கடன் உதவி தொகைக்கான காசோலையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தமிழ்நாடு பாரா வாலிபால் சங்க மாநில தலைவர் டாக்டர் ராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.