சேலம், ஜன.16- சேலத்தில் மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில் 2 உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், கருப்பூர் ஆதிதிராவிட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான இவரை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் துறையினர் கடந்த ஜன.11 ஆம் தேதியன்று கைது செய்து மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இதன்பின், ஜன.12 ஆம் தேதியன்று உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அன்றைய தினம் இரவே பிரபாகரன் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் துறை தாக்கியதாலேயே பிரபாகரன் உயிரிழந்துள்ளார் எனக்கூறி, சம்பந்தப்பட்ட காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில், போராட்டக்காரர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சம்பந்தபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு சனியன்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே ஞாயிறன்று அதிகாலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைப்படி, திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை சேலம் சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.கனகராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் பிரபாகரன் உடல் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான கருப்பூர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. மேலும், உயிரிழந்த பிரபாகரன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.