districts

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

குடியாத்தம், மே 11-

   வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீகூர் மேட்டுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்பாண்டியன் (24). கூலி வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை காலை பரத்பாண்டியன் தனது வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

   நீண்ட நேரமாகியும் மகன் வராததால் அவரது பெற்றோர் நிலத்துக்குச் சென்று பார்த்தனர். அங்கு பரத்பாண்டியன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்திற்கும் மின் வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பரத் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.