வந்தவாசி,ஜூன் 9-
வந்தவாசி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்குட்பட்ட சென்னாவரம், பாதிரி, கீழ்சாத்தமங்கலம், செம்பூர், மாம்பட்டு, மும்முனி, வெண்குன்றம், பிருதூர் ஆகிய 8 வருவாய் கிராமங்கள் வந்தவாசி நக ராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு அனுப்புமாறும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் ச.அண்ணாதுரை கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், வந்தவாசி நகராட்சி யுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க ஊராட்சி மன்றத் தலைவர்கள் எஸ்.வீரராகவன் (சென்னாவரம்), வெ.அரிகிருஷ்ணன் (பாதிரி), மு.திவ்யா (கீழ்சாத்தமங்கலம்), ர.சித்ரா (செம்பூர்), ச.தேன்மொழி (மாம்பட்டு) ஆகியோர் தலைமையில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்த வாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளர் மாணிக்க வரதனிடம் மனு அளித்தனர்.
அப்போது, இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நகராட்சியுடன் எங்கள் கிராமங்கள் இணைந்தால் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பறிபோகும். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறும் அபாயம் உள்ளதால் விவசாயம் பாதிக்கப்படும்.
ஊராட்சிகளுக்கு ஒன்றிய, மாநில அரசு வழங்கும் சிறப்பு நிதியை நாங்கள் இழக்க நேரிடும். சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை உயரும். எனவே நகராட்சியுடன் எங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.