districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் மழையளவு 

சென்னையில் சனிக்கிழமை காலை முதல் பிற்பகல்  வரை பெய்த மழை அளவு பின்வருமாறு:-
பேசின் பிரிட்ஜ்       163.2
கத்திவாக்கம்       158.1
தண்டையார்பேட்டை 152.4
திருவொற்றியூர்        149.7
ஆலந்துார்        141.9
மீனம்பாக்கம்        137.6
வடபழநி            136.2
மதுரவாயல்        134.8
சென்னை சென்ட்ரல் 131.7
பெரம்பூர்        127.6
நுங்கம்பாக்கம்        126.3
அமிஞ்சிக்கரை        125.1
மணலி            124.5
கொளத்துார்        124.2
அயப்பாக்கம்        122.7
மாதவரம்        122.5
வளசரவாக்கம்        122.4
அடையார்        121.2
புழல்            118.8
மடிப்பாக்கம்        118.2
ஐஸ்ஹவுஸ்        116.1
சோழிங்கநல்லுார்        116
மணலி புது டவுன்    111.2
அண்ணாநகர்மேற்கு 108
முகலிவாக்கம்         104.9
அம்பத்துார்         87.3
திரு.வி.க., நகர்         80.6
பெருங்குடி         80.6
ராஜாஅண்ணாமலைபுரம் 76.5
அண்ணா நகர்         76.2
உத்தண்டி         72.9

 

அம்மா உணவகங்களில் இலவச உணவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ.30- தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொண்டு வரு கிறது. இதனிடையே மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்து களுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்க ளிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இருளில் மூழ்கிய கிழக்கு கடற்கரை சாலை

சென்னை,நவ.30 சென்னை கிழக்கு கடற்கரை  சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கியது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசியதால் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம்,அக்கரை, பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஈசிஆர் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியாத நிலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர். மேலும் புயல் காரணமாக சனிக்கிழமை மாலை முதல் ஈஞ்சம்பாக்கம், அக்கரை பகுதியில் பாதுகாப்பு கருதி குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியால் அவதிப்பட்டனர். காற்று 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரம் விழுந்ததால் சென்னை திருச்சி   சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, நவ.30- மதுராந்தகம் அருகே சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  மரம் சாய்ந்து வேரோடு விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.  இதன் காரணமாக மதுராந்தகம்  அருகே கருங்குழி என்ற இடத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை நடுவில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாலையில் சாய்ந்ததால் சென்னை திருச்சி தேசிய  நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக போக்குவரத்தை மாற்று பாதையில் அனுமதித்து வருகின்றனர். தற்பொழுது மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் கருங்குழி பேரூராட்சி நிர்வாக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம்- கடற்கரை இடையிலான  புறநகர் ரயில் சேவை நிறுத்தம்

சென்னை, நவ.30- மின் கம்பி விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையிலான புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இயக்கப்பட்ட ரயில்களும் மிகமிக தாமதமாக இயக்கப்பட்டன. ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டிவரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பழவந்தாங்கல் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீர் தேங்கியதால் மூடல்

சென்னை, நவ.30- புயல் காரணமாக சென்னையில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை பெய்த கனமழையால் புறநகர் பகுதியான பழவந்தாங்கல் ரயில்வே சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதை தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளது. இதனால் பழவந்தாங்கல் நங்கநல்லூர் மேடவாக்கம், மடிப்பாக்கம் வேளச்சேரி போன்ற பகுதிக்கு செல்லக்கூடியவர்கள் மீனம்பாக்கம் சுரங்கப்பாதை வழியாக சென்றனர்.  சுரங்கப்பாதையை யாரும் கடக்க முடியாத வகையில் காவல்துறையினர் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், கிண்டி கத்திப்பாரா தாம்பரம் போன்ற பகுதிக்கு  செல்வோர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையம் வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை வாபஸ்

சென்னை, நவ.30- வங்ககடலில் உருவான  புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை கரையைக் கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முற்றிலுமாக கரையை கடக்க 3மணி முதல் 4 மணி  நேரம் ஆனது. புயல் கரையை கடந்தபோது  மாமல்லபுரம் மரக்காணம் உள்ளிட்ட பகுதியில் மரங்கள் சாய்ந்தன. போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.  முன்னதாக  புயல் காரண மாக சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களுக்கு விடப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை சனிக் கிழமை மாலை திரும்பப்  பெறப்பட்டது. சென்னையில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சாலையோரம் மின்சார பெட்டிகள் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் தண்ணீர் வடிந்தவுடன் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும் சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை மூடல் புதுச்சேரியில் மழைநீர் தேங்கியதால் கிழக்கு கடற்கரைச்சாலை மூடப்  பட்டது. கிழக்குகடற்கரைச் சாலையில் பாக்குமுடை யான்பட்டு முதல் சிவாஜி சிலை வரை தண்ணீர் அதிகளவில் தேங்கி யுள்ளது. லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் சிவாஜி சிலை வழியாகவோ, கொக்கு பார்க் வழி யாகவோதான் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

முதுநகரில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கடலூர், நவ.29- கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில்  மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்திருந்தனர்.  இந்த நிலையில் கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் வெள்ளிக்கிமை ஏராளமான வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  அவர்கள் தரமான மீனை விற்பனை செய்கிறார்களா, அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் கைலேஷ் குமார் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி தலைமையில் சோதனை செய்தனர். அப்போது 150 கிலோ எடையுள்ள கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். இதனை மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.  இந்த ஆய்வில்  உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் பகுதியில் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில்  நீர்மட்டம் அதிகரிப்பு

திருவள்ளூர், நவ 30- திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக திகழ்வது திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கமாகும். இந்த ஏரிக்கு கிருஷ்ணா மற்றும் அருகில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் நீரே முக்கிய ஆதாரமாகும். அந்த வகை யில் கடந்த 2 நாள்களாக தொடர்ந்து விடாமல் மழை பெய்தது.  சனிக்கிழமை காலை முதல் பகல் 12 மணி வரையில் பூண்டி ஏரிப்பகுதியில் 62 மி.மீ மழை பெய்ததால் 35 அடி உயரமும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட ஏரியில்,  557 மில்லியன் கன அடிவரை நீர் இருப்பு உள்ளது. அதே போல் கிருஷ்ணா கால்வாய் மூலம் 390 கன அடியும் மற்றும் ஏரிக்கான மழை நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து 290 கன அடியும் நீர்வரத்து உள்ளது. மேலும் இங்கி ருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 100 கன அடி வீதமும், குடிநீர் வடிகல் வாரி யத்திற்கு 17 கன அடி நீரும் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏரிப்பகுதியில் 24 மணி நேரமாக மாநில பேரிட மீட்பு குழுவினர் மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூண்டி ஏரிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை (கொசஸ்லை ஆறு வடிநிலகோட்டம்) செயற்பொறியாளர் அருள்மொழி தெரி வித்தார். அதேபோல் செங்குன்றம், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கும் கணிசமான அளவு தண்ணீர் வந்துள்ளது. எனவே இந்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மழை அளவு விவரம் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு மி.மீ வருமாறு : பொன்னேரி 45, கும்மிடிப்பூண்டி32, தாமரைபாக்கம்31, செங்குன்றம்30.60, சோழவரம்29, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி தலா 20, பூண்டி17, ஜமீன்கொரட்டூர்15, ஆவடி, திருவள்ளூர் தலா13, திருவாலங்காடு9, திருத்தணி8, ஊத்துக்கோட்டை 6 என மொத்தம் 293.60 மி.மீட்டரும், சராசரியாக 19.57 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.