districts

வாட் வரி சமாதானத் திட்டத்தில் வணிகர்களை சேர்க்க கால அவகாசம்

சென்னை, பிப். 8- வாட் சமாதானத் திட்டத்தில் விடுபட்ட வணிகர்களை சேர்க்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அக்டோபர் சட்டசபை கூட்டத்தில் 110 விதியின்கீழ் அறிவித்த வாட் வரி சமாதானத் திட்டம் அரசுக்கும் வணிகர்களுக்கும் உறவுகளை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. ஆனால், 50 ஆயிரத்திற்கும் குறைவான வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதுவரை சமாதானத் திட்டத்தில் ரூ 33 கோடி மட்டுமே அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. இன்னும் ரூ 24 ஆயிரத்து 200 கோடி  நிலுவை உள்ளது. இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்ய போதிய கால அவகாசமும், விழிப்புணர்வும் இன்னமும் வணிகர்களுக்கு தேவை என்பதையே இது பிரதிபலிக்கிறது. வாட் சமாதானத் திட்டத்தில் விடுபட்ட வணி கர்களை சேர்த்திட 1 ஆண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வணிகவரித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர், ஆணையர் ஆகி யோருக்கு பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், வாட் சமாதானத் திட்டத்தில் 2021ஆம் ஆண்டுவரை வணிக வரி தணிக்கை செய்யப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு வரை வணிகவரித்துறை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படாமல் இருக்கும் வணிகர்கள், இத்திட்டத்தால் பயன்பெற முடியாது என்பதால், அவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியும் நிலுவைக்கு உள்ளாகிவிடும் என்பதை அரசும், வணிக வரித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, 2021ஆம் ஆண்டுவரை தணிக்கை செய்யப்படாத கணக்குகளை உடனடியாக தணிக்கை செய்து, அறிக்கை அளித்து விடுபட்ட அவர்களையும், இத்திட்டத்தில் உடனடியாக இணைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இந்த திட்டத்திற்கான கால அவகாசம் அவசியம் தேவை. இத்திட்டம் முழுமை அடைந்தால் மட்டுமே, அரசுக்கு வரி வருவாயும், அதிகாரிகளின் பணிச்சுமையும் வணி கர்களின் மனக்குறையும் ஒரு முடிவுக்கு வரும். எனவே, 15.2.2024 தேதியில் முடிவடையும் சமாதானத் திட்டத்தை மேலும் 1 ஆண்டுக்கு நீட்டித்து, அரசுக்கு வரி வருவாயையும், வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள், வரி நிலுவை செலுத்தி இயல்பாக வணிகத்தை தொடர உடனடி நடவடிக்கை எடுத்து உதவிடு மாறும், வணிகர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். இதனால் அரசுக்கு கூடுதல் வரி வருவாய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.