districts

வாகனத்தில் 40 கிமீ வேகத்தில் சென்றால் அபராதம் கிடையாது போக்குவரத்து காவல்துறை விளக்கம்

சென்னை, ஜூன் 21-

    சென்னையில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் என்ற சென்னை காவல் துறையினரின் அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

   கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்திற்குள்ளும் இரவு நேரத்தில் 50 கி.மீ. வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த வேகத்தை தாண்டி வாகனங்கள் சென்றால் அது ஓவர் ஸ்பீடு என்ற விதிமுறையின் கீழ் வரும் என்றும் தெரிவித்தார்.

    இதை கண்காணிக்க சாலைகளில் 10 ரேடார் கன் கேமரா நிறுவப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வேகத்தை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறினார்.

    இதற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக சுதாரித்த சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அதனுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் விளக்க கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

    அதில் வாகனங்கள் வேகம் தொடர்பான விதிமுறை மீறலில் ஈடுபட்டால் அவருக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் ரேடார் கன் கேமரா சாலையில் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவு வரும் வரை இந்த அபராதம் விதிக்கப்படாது என்றும், அதுவரை வேகம் தொடர்பான ஆய்வுக்காக பதிவுகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

   மேலும் போக்குவரத்து காவல்துறையினரால் முக்கிய சாலைகளில் வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்கின்றன என்பதை கண்காணிக்க எல்இடி திரைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது காட்சிப்படுத்த மட்டுமே அபராதம் விதிப்பதற்கு அல்ல என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.