தஞ்சாவூர், ஆக.3- தமிழ்க் கல்வெட்டுக்கள் நுட்பமாக ஆராயப்பட வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு தமிழ்க் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆக.1 முதல் 10 வரை, பத்து நாள்கள் தமிழ்க் கல்வெட்டியல் பயிற்சிப் பட்டறை நடந்து வருகிறது. இதற்கு தலைமை வகித்து, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் பேசுகையில், “தமிழ்க் கல்வெட்டுக்கள் நுட்பமாக ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் நமது பண்டைய கலாச்சாரம், தமிழர் வாழ்வியல், வரலாறுகளை நாம் அறிந்து கொள்ள முடியும். வருங்கால தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார். பயிற்சிப் பட்டறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் பாரிசில் உள்ள இந்தியவியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது. இப்பயிற்சிப் பட்டறை தொகுப்பாய்வு, பாட ஆய்வு, தரவுதள உருவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் அப்பாசாமி முருகையன் கூறினார். போலந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்தும், புனே, ஹைதராபாத், புதுதில்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.