சென்னை, மே 13- எண்ணூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகமது நாசர். இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவரது மகன் முகம்மது நபில் (17). 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வாகியுள்ளார். இந்நிலையில் திங்களன்று (மே 13) ஆவடியில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்று விண்ணப்பம் வாங்குவதற்கு எண்ணூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது ஆவடி செல்லும் ரயிலில் ஏறுவதற்கு மாறாக கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் சேரும் கனவோடு நுழைவு படிவம் வாங்கச் சென்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.