சென்னை, ஜூலை 30-
தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் திடீரென ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மின் மீட்டர் கணக்கீடுகள் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள மின் வாரியங்களுக்கு ஒன்றிய அரசு உத்தர விட்டிருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான பணிகளை மின்வாரியம் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் இதற்கான டெண்டர் கோருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 3 தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த மின் வாரியம் முடிவு செய்தி ருந்தது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க கடந்த 5 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த டெண்டருக்கான கடைசி தேதி 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலை யில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது.
டெண்டர் விளக்க கூட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 265 சந்தேகங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகங்கள் அடிப்படையில் டெண்டர் விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய டெண்டர் கோர மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் மூன்று தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு பதில் ஒரே தொகுப்பாக பொருத்தவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரவும் மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி மேலும் தாமதமாகும் எனத் தெரிகிறது.