விழுப்புரம், பிப்.1- விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டது பவர் ஹவுஸ் பகுதி. இதன் அருகே ரயில்வே பகுதியில் வசிக்கும் 50 க்கும் மேற்பட்ட தலித்துகள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவ லகத்திற்கு வந்தனர். அப்போது, ரயில் நிலையம் அருகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலை முறையாக 44 தலித் குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றன. இந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அப்போது தலித் மக்களை வெளியேற்ற, கடந்த 2020 ஆம் ஆண்டு தனியார் கம்பெனி ஒன்று வருவாய் துறை உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. தலித் மக்களின் வாழ்வை சீரழிக்கும் நடவடிக்கையாகும். எனவே, பல்லாண்டு காலமாக வசித்து வரும் 44 ஏழை-எளிய குடும்பத்தை காலி செய்ய வற்புறுத்த கூடாது என்று வலியுறுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன், வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன், மாவட்ட குழு உறுப்பினர் கே.வீரமணி, மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.