சென்னை,நவ.18- கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. 12 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பாம்பை அங்கு பணியில் இருந்த காவலாளிகள் பார்த்தனர். அவர்களை பார்த்ததும் பாம்பு தப்பியோடி விட்டது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையில் உள்ள பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மலை பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு முறை அந்த மலைப்பாம்பை காவலாளிகள் பார்த்தனர். பாம்பை பிடிப்பதற்காக வனத்துறையினர் பாம்பு நடமாட்டம் இருந்த பகுதியில் கூண்டில் கோழியை வைத்தனர். இந்த நிலையில் கோழியை உண்ண வந்த போது மலைப்பாம்பு வனத்துறையினரிடம் சிக்கிக் கொண்டது. அதை வனத்துறையினர் பிடித்தனர். அந்த மலைப்பாம்பு 12 அடி நீளம் கொண்டது. அதன் எடை 30 கிலோ ஆகும். பிடிபட்ட அந்த மலைப்பாம்பை வன ஊழியர்கள் கிண்டியில் உள்ள சிறுவர்கள் பூங்காவில் கொண்டு சென்று விட்டனர்.