செங்கல்பட்டு, செப். 3- செங்கல்பட்டு நகரத்தில் 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பகுதி குழு உறுப்பினர் என்.அன்பு நகராட்சி ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, செங்கல்பட்டு நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா பண்டிகைக்கு மாவட்டம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நகராட்சிக்கு வரும் வருமானத்தை விட தனியாருக்கு பல லட்சங்கள் வருமானம் செல்கிறது. இந்த தசரா விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு குடி தண்ணீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. அந்த இடத்தில் ரூ.33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன கழிப்பிடம் முழுமையடையாமல் இன்னமும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. தசரா பண்டிகை முடிந்த வுடன் இந்த இடம் குப்பை மேடாக மாறி விடுகிறது. மேலும் ஒரு சில நபர்கள் ஜல்லி, மண், மணல், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களை கொட்டி விற்கும் இடமாக மாறிவிடுகிறது. எனவே, அறிஞர் அண்ணா ஆண்கள் பள்ளி முதல், பிஎஸ்என்எல் அலுவலகம் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு உள்ளது போல் பேவர் பிளாக் அமைத்து தூய்மை செய்து பொதுமக்கள் பயன்படும் வகையில் அமைத்து தர வேண்டும். மேலும், தசரா விழாவில் விற்பனை யாகும் திண்பண்டங்கள் சுகாதாரமான உள்ளது என்பதை தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.