திருபெரும்புதூர், ஏப்.18- திருபெரும்புதூர் அருகே போலீஸ்போல் நடித்து கூகுள்பே மூலம் பணம் பறித்த 2 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே காரணித்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லூட்புர் ரகுமான். இவரை 2 வாலிபர்கள் போலீஸ்காரர்கள் என கூறி விசாரணை செய்ய வேண்டும் என மிரட்டி வலுக்கட்டாயமாக தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்துச் சென்றனர் சிறிது தூரம் சென்றதும் அவரை இறக்கிவிட்ட வாலிபர்கள் ‘கூகுள்பே’ மூலம் தங்களது வங்கி கணக்குக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பும்படி கூறி பறித்துக் கொண்டனர். பின்னர் லூட்புர் ரகுமானை அங்கேயே இறக்கி விட்டு மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ஓரகடம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் போலீஸ் போல் நடித்து பணம் பறிப்பில் ஈடுபட்டது வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன், காரணித்தாங்கல் சதீஷ்குமார் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். புகார் தெரிவித்த சில மணி நேரத்திலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.