கிருஷ்ணகிரி, அக்.4- ஓசூர் மாநகராட்சி தேன்கனிக்கோட்டை சாலையில் ஐடிஐ முன்பு 43 வது வார்டுக்கு உட்பட்ட அம்மன் நகர் உள்ளது. இங்குள்ள செவன்த் டே நிர்வாக அலுவலக சுற்றுச்சுவர் ஒட்டி நவதி செல்லும் சாலை ஓரம் 100 அடி நீளத்திற்கு குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கிக் கிடக்கிறது. சுமார் 6 மாதங்கள் கடந்த நிலையில் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் அடிக்கடி குப்பையை தீவைத்து எரிப்பதால் கடும் மாசு ஏற்படுவதோடு,நோய் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. மாநகராட்சி துப்புரவு பணி அதிகாரி களிடமும், வட்டாட்சியர், ஒன்னல் வாடி ஊராட்சி நிர்வாகத்திடமும், பல முறை பொது மக்கள் புகார் அளித்தும் குப்பை எடுக்கப்படவில்லை. இது குறித்து அம்மன் நகர் பகுதியில் விசாரித்ததில் குப்பை கொட்டியுள்ள பகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி அல்ல, 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒன்னல்வாடி ஊராட்சிக்கு உட்பட்டது. இப்பகுதிக்கும் சாலையின் மறு புறமுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கும் குப்பைகள் சேகரிப் பதற்கு பணியாளர்கள் இல்லை என்பதால் குடியிருப்பு வாசிகள் இங்கு குப்பை கொட்டி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது. எல்லை பிரச்சனையால் மக்களுக்கு பெரும் தொல்லை ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் குப்பைகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடும் துர்நாற்ற மும், நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாராட்சியர் உடனடியாக தலையிட்டு நவதி சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், வீடுகளில் குப்பைகளை சேகரிக்க பணி யாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.