சென்னை, டிச. 10 - பள்ளிக்கரணையில் அமைக்கப்பட்டுள்ள சதுப்பு நில சூழலியல் பூங்கா வெள்ளியன்று (டிச.10) முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். வனத்துறையின் கட்டுப்பாட்டில் 700 எக்டர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி உள்ளது. சென்னை மாநகரத்தில் பெரு மழைக் காலத்தில் வெள்ள நீர் வடிகால் பகுதியாகவும் சதுப்பு நிலம் இருந்து வருகிறது. இச்சதுப்புநிலம் சுமார் 231 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நீரை ஒக்கியமடுவு மற்றும் கோவளம் ஆகிய இரண்டு நீர் வெளியேற்றும் கால்வாய் மூலம் வங்காள விரிகுடாவில் கலக்க உதவுகிறது. இச்சதுப்பு நில பகுதியில் 176 வகை யான பறவையினங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நில நீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையான ஓடு மீன் இனங்கள் மற்றும் 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாக வும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவ ரங்கள் மற்றும் விலங்கினங்கள் பரவலுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
2019-2020ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இந்த சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில் 20 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கரணை சதுப்பு நில சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பார்வையாளர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நடைபாதை, சதுப்பு நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விவரம், மீன் இனங்கள் பட்டாம்பூச்சி வகை, பறவை இனங்கள், பல்லுயிர் பரவல் மற்றும் அதன் வளம் குறித்த விவ ரங்களை விளக்கும் வகையில் கருத்தியல் அடையாளங்கள் மற்றும் மாதிரிகள், சூழலியல் பூங்காவில் அழகியலை மேம்படுத்த வேங்கை, அரசு, செந்சந்தனம், சந்தனம், குமிழ், மகோகனி, வேம்பு, நீர்மருது இலுப்பை போன்ற மண் சார்ந்த 5,000 மரக்கன்றுகள் நடைப்பாதையின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளத்தடுப்பு பணிகள் தற்போது சுமார் 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூர் வலசை பறவை இனங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.