districts

img

ஊராட்சி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திடுக: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 22- தமிழக ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி டேங்க் ஆப்ரேட்டர்கள், தூய்மை பணி யாளர்கள், தூய்மை காவலர்கள்,  டிபிசி  பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து,  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (ஜூலை 22),  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு மாத ஊதியம்  ரூ.14,593 வழங்க வேண்டும், துப்புரவு  பணியாளர்கள், தூய்மை பணியாளர் களுக்கு மாத ஊதியம் ரூ.12,593 வழங்க  வேண்டும், டெங்கு கொசு புழு ஒழிக்கும் பணி யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு போட்ட அரசாணைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும், அனைத்து  ஊராட்சிகளிலும் சீருடை, கையுறை, பேட்டரி  வண்டிகளை வழங்க வேண்டும், சில ஊராட்சிகளில் 40 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கதிர்வேலு தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட பொருளாளர் பழனி, மாவட்ட துணைத் தலைவர்கள் குமாரவேலு, மோகன்,  ஒன்றிய நிர்வாகிகள் தீபா, தேவி,  குமாரி, வைலட், சிஐடியு மாவட்ட செயலாளர்  கே.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட துணைத் தலைவர்  மாயகண்ணன் ஆகியோர் பேசினர்.பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுவை  பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.