districts

img

தரகர்களின் பிடியில் கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம்!

கள்ளக்குறிச்சி, செப்.21- தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் வணிகவரித்துறை, மதுவிலக்கு ஆயத்துறை, இவைகளுக்கு அடுத்தபடியாக முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுத்துறை 3- வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறை 9 மண்டலங்களாகவும், 50 பதிவு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டு அதன்கீழ் மாநிலம் முழுவதும் 600 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலங்களை விற்கவும், வாங்கவும் கிரைய பத்திரங்கள், அடமான பத்திரங்கள், உயில் பத்திரம், தானப்பத்திரம் மற்றும் திருமண ப்பதிவுகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அந்தந்த பகுதியில் உள்ள நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பின் படி முத்திரை தீர்வை விதிக்கப்பட்டு அதன்படி முத்திரைத் தீர்வை கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தப்பட்டு பத்திரம் பதிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி உள்ள விவசாய நிலங்கள், அரசு அனுமதி பெற்று வீட்டு மனைகள், ஏற்கெனவே கிரயம் பெற்ற வீட்டுமனைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர 10 சென்ட் நிலத்திற்கும் குறைவான உள்ள நிலங்களை மனைகளாக பத்திர பதிவு செய்ய அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இவ்வாறு  பத்திரப்பதிவு செய்ய கூறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பதிவு செய்யலாம். ஆனால் தியாகதுருகம் பகுதியில் ஒரு சிலர் விவசாய நிலங்களை வாங்கி அரசு அனுமதி பெற மனை பிரிவு செய்வதற்காக சென்றால் அதற்கான நடைமுறைகளுக்கு அதிக நாட்கள் ஆகிறது மற்றும் அதிக செலவாகிறது என கூறப்படுகிறது. இதனால் மனை விற்பனையில் ஈடுபடுபவர்கள் 3 சென்ட் மற்றும் 5 சென்ட் மனைகளாக பிரித்து விற்பனைசெய்கின்றனர். இதற்காக புரோக்கர்கள் சார்பதிவாளருக்கு ஒரு சென்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்து விட்டு கிரையம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் தியாகதுருகம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இவ்வாறு அரசு அனுமதி பெறாமல் 5 சென்ட் மற்றும் 10 சென்ட் நிலங்களாக எவ்வளவு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் பொதுமக்கள் ஆவண எழுத்தர் இடம் ஆவணங்களை எழுத செல்லும் பொழுது முத்திரைத் தீர்வை கட்டணம், பதிவு கட்டணம், எழுத்துக் கூலி ஆகியவற்றுடன் மொத்தமாக சேர்த்து ஆவண எழுத்தரே பெற்றுக் கொள்கின்றனர். மேலும் சார் பதிவாளர்களுக்கு ஒரு பத்திரத்திற்கு ரூ. 2 ஆயிரம் என கூடுதலாக பெற்று சார்பதிவாளர்களுக்கு வழங்குவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பத்திரப்பதிவு செய்ய வரும் பொதுமக்கள் பலரும் வேறு வழியின்றி மொத்த பணத்தையும் ஆவண எழுத்தர்களிடம் வழங்கும் நிலை உள்ளது. ஆவண எழுத்தர்களுக்கு எந்தெந்த ஆவணங்களுக்கு எவ்வளவு எழுத்துக் கூலி வாங்க வேண்டும்,  முத்திரை தீர்வை கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றின் விவரங்கள் குறித்து பொதுமக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.