சென்னை, ஏப். 13 - ஆராய்ச்சி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதனன்று (ஏப்.12) இரவு முழுவதும் ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த சச்சின்குமார் ஈடுபட்டு வந்தார். வேளச்சேரி யில் தங்கியிருந்த வாடகை வீட்டில் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சச்சின்குமாரின் ஆய்வு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் அகிஷ் குமார் அளித்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதனை நிர்வாகம் மூடி மறைப்பதாகவும் குற்றம்சாட்டி மாணவர்கள் ஐஐடி வாயிலில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மாணவனின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.