சென்னை, பிப். 16 - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்துக்காக சுவரொட்டி (போஸ்டர்கள்) ஒட்டிய வேட்பாளர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். அந்த போஸ்டர்களை அகற்று வதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 117ஆவது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்திற்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளார். மேலும், தனக்கு கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி அமர்வில் புதனன்று (பிப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட தடை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி போஸ்டர் ஒட்ட எவரையும் அனுமதிக்க கூடாது என மாநகராட்சிக்கும், காவல்துறை ஆணையருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போது அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வசூலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவம திப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதியின்றி வேட்பாளர்கள் போஸ்டர் ஒட்டக் கூடாது என விளம்பரம் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்.21ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி, மாநில தேர்தல் ஆணையம், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.