சென்னை, மே 20 - சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் (96.8 பாரன்`ஹீட்) வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த பிறகு வெப்பநிலை மேலும் உயர்ந்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. அனல் காற்று வீசி வருவதால், பெரும்பாலானோர் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த அக்னி நட்சத்திர காலமானது வரும் 29ம் தேதி வரை நீடிக்கிறது. சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.