செய்யாறு, மே 17-
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தில் சுடுகாடு அருகே 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த 10 நாட்களாக மர்ம கும்பல் சிலை செய்ய கற்கள் தோண்டி எடுப்பதாகக் கூறி, இந்த நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கிளறி கருங்கற்களை எடுத்து 2 லாரி லோடு கற்களை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து சந்தேகமடைந்த கிராம மக்கள் வாகனத்தை மடக்கி கேட்டனர். அனு மதி பெற்றுதான் கற்கள் தோண்டி எடுப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், கிராம மக்கள் உடனடியாக பணியை நிறுத்தக் கூறியதும் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றனர்.
பின்னர், வருவாய்த் துறை, கனிம வளத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விழுப்புரம் மண்டல கனிமவளத் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த வாகனத்தை பறிமுதல் செய்து மோரணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து கனிம வளத்துறை ஆய்வாளர் மூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கனிம வளத் துறை உதவி பொறியாளர் மெகபூப், செய்யாறு வட்டாட்சியர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியா ஆகி யோர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தப்பட்டதா? என ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், பொது மக்களின் அறியா மையை பயன்படுத்தி நவீன சேட் டிலைட் தொழில்நுட்ப உதவியுடன் பூமியின் அடியில் உள்ள கிரானைட் கற்கள் தோண்டி திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து துறைகளும் விழிப்புடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், ஏனாதவாடி கிராமத்தில் பல கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கிரானைட் கற்களை திருடி செல்லாமல் தடுக்க சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.