மாமல்லபுரம்,பிப்.23- ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரை சேர்ந்தவர் காய் (வயது 45). இவருடைய மனைவி நீனா (44). இவர்களுக்கு பென் (12) என்ற மகனும், லெனி (10) என்ற மகளும் உள்ளனர். துபாயில் வாங்கிய பேருந்தை ரூ 50லட்சம் செலவு செய்து ஒரு சொகுசு வீடாக மாற்றினர். இதையடுத்து அவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி தங்கள் பேருந்து பயணத்தை துபாயில் தொடங்கினர். பிறகு ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று சுற்றி பார்த்த அவர்கள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியா வந்த அவர்கள் பஞ்சாப், உத்தர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு புதனன்று மாமல்ல புரம் வந்தனர். மாமல்லபுரம் சுற்றி பார்த்து விட்டு ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்றுவிட்டு, பிறகு நேபாளம், மியான்மர், வியட்நாம், கம்போ டியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், உருகுவே, பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, கொலம்பியா, ஈக்வடார் ஆகிய நாடுகள் வழியாக சென்று அமெரிக்காவில் தங்கள் பயணத்தை நிறைவு செய்கின்றனர். கடற்கரை சூழ்ந்து உள்ள நாடுகளுக்கு சிறப்பு விசா பெற்று கப்பல் மூலம் இந்த பேருந்தை எடுத்து செல்லும் இவர்கள் அந்த நாடுகளில் சாலை மார்க்கமாக சுற்றி பார்க்க செல்கின்றனர். துபாய் பள்ளியில் பயிலும் மகன், மகளை தங்களுடன் சுற்றுலா அழைத்து செல்வதற்காக சிறப்பு அனுமதி பெற்று அழைத்து வந்துள்ளனர். இவர்கள் கணினி மூலம் 6 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு படிக்கின்றனர். குறிப்பாக இந்த பேருந்தை சாப்ட்வேர் என்ஜினீயர் காய் இதுவரை 22 ஆயிரம் கிலோ மீட்டருக்கு ஓட்டி வந்துள்ளார். இவர்கள் ஓட்டல்களுக்கு செல்லாமல் வாகனத்திலேயே சமைத்து சாப்பிடுகின்றனர். பேருந்தில் சோலார் வசதியும் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் மூலம் மின்சார வசதி பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன வசதி, பிரிட்ஜ் பயன்படுத்துகின்றனர்.