விழுப்புரம்,செப்.27- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் புதுவை விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அண்ணா சிலை உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணி வித்து அவமதித்தனர். இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தனிப்படை அமைத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கண்டமங்கலம் அருகே நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (21), மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வீரமணி (22), பிரதீஷ் (24) உள்ளிட்ட சிலர் இதில் ஈடுபட்டிருப்பதும், அவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வீரமணி உள்ளிட்ட 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.