விழுப்புரம்,ஆக.23-
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு விழுப்பரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 28-ந் தேதி (திங்கள்) காலை தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பானது, ஏற்கெனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 9080515682 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.