சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 11 - ஏபிஆர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கன கராஜ் வலியுறுத்தி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை தலைமையிடமாக கொண்டு ஏபிஆர் குரூப்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 22 இடங்களில் கிளை அலுவலகங்களோடு செயல்படும் இந்த நிறுவனத்தை அல்தாப் தாசிப் என்பவர் நடத்தி வருகின்றனர். ஏபிஆர் பெயரில் பைனான்ஸ் அண்டு சிட்ஸ், சூப்பர் மார்க்கெட், தங்க மாளிகை, பாத்திரக்கடை, ரெஸ்டாரென்ட், டிராவல்ஸ் போன் றவை செயல்பட்டு வருகின்றன. ஏபிஆர் பைனான்ஸ் அண்டு சிட்ஸ் நிறுவனம் மாதாந்திர சீட்டு, பண்டுகளை நடத்தி வருகிறது. இவற்றில் 15 நபர்களை சேர்க்கும் முகவருக்கு ஒரு சீட்டு/பண்டு கமிஷனாகவும், 500 நபர்களை சேர்க்கும் முகவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆயிரம் பேரை சேர்க்கும் முகவருக்கு லட்சம் ரூபாயும் கமிஷனாக தரப்படுகிறது. இதன்படி 2022ஆம் ஆண்டும் முதல் பணம் வசூலிக்கப்பட்ட வர்களுக்கு 2023ஆம் ஆண்டு தீபாவளிக்கான நகை உள்ளிட்ட பொருட்களை வழங்கவில்லை. பணத்தை கட்டி ஏமாந்த மக்கள் முகவர்களிடம் பணத்தை கேட்ட னர். முகவர்கள் ஏபிஆர் அலுவல கத்தை தொடர்பு கொண்டபோது முறையாக பதிலளிக்க மறுத் துள்ளனர். 14 பேர் தற்கொலை? இதனையடுத்து வசந்த மேரி என்பவர் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யாறு காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அல்தாப் தாசிப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர். 90 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர் ஜாமினில் வந்துவிட்டார். அதேசமயம் ஏபிஆர் நிறுவனங் கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் 14 முகவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படு கிறது. இதனை தொடர்ந்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரி டம் ஏராளமனோர் புகார் அளித் துள்ளனர்.
அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 1200 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ள பிரச்சனையில் காவல் துறையினர் உரிய நடவடிக் கைகளை எடுக்கவில்லை என்று முகவர்கள் அதிருப்தி தெரிவிக் கின்றனர். இந்த நிலையில், பணத்தை இழந்தவர்களுக்கு அதை மீட்டுக் கொடுக்க வேண்டும், புகார் கொடுத்த அனைவருக்கும் எப்ஐஆர் நகல் தர வேண்டும், குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்து, விரைவு நீதி மன்றத்தின் வாயிலாக வழக்கை முடிக்க வேண்டும், திருவண்ணா மலை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, நிதி நிறுவனத்திற்கு துணை போவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (ஜூலை 11) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்குழு ஒருங்கிணைப் பாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், “புகார் வந்தால் அதன் மீது வழக்கு பதிய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருளாதார குற்றப்பிரிவு அமல்படுத்த மறுப்பது ஏன்? 14 தற்கொலைகள் நிகழ்ந்துள்ள நிலையில் அவற்றை இணைத்து விசாரிக்க முன்வராதது ஏன்? 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால் குற்றவாளி தப்பித்திருக்க முடியாதல்லவா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். “முதலாளிகள், மோசடிக்காரர் கள், ]
புறம்போக்கு நிலத்தை வளைப் பவர்களின் அடியாட்களாக காவல்துறையும், அரசு நிர்வாகமும் மாறுவதை அரசு தடுக்க வேண்டும். முகாம் நடத்தி பாதிக்கப்பட்டவர் களிடம் இருந்து புகார்களை பெற வேண்டும். ஏபிஆர் நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இந்த பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் குறிப்பிடுகையில், “ சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு கிளையில் மட்டும் 200 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்துள்ளது. இருந்தும் காவல் துறை மெத்தனமாக செயல்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.லெனின், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் தீ.சந்துரு, சிபிஎம்சைதை பகுதிக்குழு உறுப்பினர் சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.
பணத்தை இழந்த முகவர்கள் என்ன சொல்கிறார்கள்?
தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் காரம்பாக்கத்தை சேர்ந்த லஷ்மி என்ற முகவர் 102 பேரை சேர்த்து 4.84 லட்சம் ரூபாய் வசூலித்து காட்டுப்பாக்கம் கிளை அலுவலகத்தில் கட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18ந் தேதி 7 சேர்ந்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்தோம். சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றவியல் பிரிவில் புகார் கொடுத்தோம். செய்யாறில் புகார் கொடுத்தோம். இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செய்யாறு ஆய்வாளர், நிறுவனம் மீது குற்றச்சாட்டு இல்லாமல் புகார் தர சொல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை இவ்வாறு அலைகழித்தால் என்ன செய்வது?” என்றார்.
வெளியே வருவதில்லை
“தீபாவளி மளிகை சீட்டு, நகை திட்டத்தில் 250 பேரை சேர்த்தேன். 11 லட்சம் ரூபாய் வசூலித்து செய்யாறு அலுவலகத்தில் கட்டினேன். பொருட்களை தரவில்லை. பணத்தை இழந்தவர்கள் தினசரி வீட்டிற்கு வந்து கேட்டு தகராறு செய்கின்றனர். செத்துவிடுங்கள், செத்து விட்டார்கள் என்று விட்டுவிடுகிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதனால் வீட்டைவிட்டு வெளியே வருவதே இல்லை. நிம்மதியாக தூங்க முடியவில்லை. குழந்தை இருப்பதால் உயிரோடு இருக்கிறேன்” என்று பல்லாவரத்தை சேர்ந்த முகவர் ஆரிபா கூறினார்.
கணவரை பிரிந்தேன்
ஆவடியை சேர்ந்த 40 வயதான கங்கா என்ற முகவர் கூறுகையில், “217 பேரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் வசூலித்து கட்டினேன். பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து கேட்டு பிரச்சனை செய்வதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு கணவரை பிரிந்து விட்டேன். தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால் குழந்தையை அரசு பள்ளிக்கு மாற்றிவிட்டேன்” என்றார்.
கடையை மூடிவிட்டேன்
“ஆவடியில் சிறிய துணிக்கடை நடத்தி வந்தேன். அங்கு வருகிறவர்களிடம் பேசி 200 பேரிடமிருந்து ரூ.13.50 லட்சம் வசூலித்து கட்டினேன். பணத்தை இழந்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கடையை மூடிவிட்டேன். எனது இருச்சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்துக் கொண்டார். கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டால் மிரட்டுகிறார்கள்” என்கிறார் ஆவடியை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான லிங்க கனி.
அவமானம்!
காஞ்சிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கே.சுமதி, “100 பேரிடம் இருந்து ரூ.5 லட்சம் வசூலித்து செய்யாறு கிளையில் கட்டினேன். அதற்கான பொருளை தரவில்லை. ஒரு சில முகவர்களுக்கு பணம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதை கேள்விபட்டவர்கள், பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறீர்களா? என்று அவமானப்படுத்துகிறார்கள். ஏபிஆர் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசும் மேலாளர்கள் மேலும் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 17 பண்டுகளையும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் 40 பண்டுகளையும் செட்டில் செய்வதாக பேரம் பேசுகின்றனர். பணத்தை இழந்தவர்களிடம் மேலும் பணத்தை பறிக்க பார்க்கிறார்கள்” என்றார்.