பொன்னேரி, ஜூன் 2-
மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே கேட்டை பயன்படுத்தி வரு கின்றனர்.
ரயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டி கள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வரு கின்றனர். இந்நிலையில் வியாழனன்று இரவு 8 மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததை தொடர்ந்து ரயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரயில்வே கேட்டின் இருபக்கமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாக னங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.
இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரயில் நந்தியம்பாக்கத்திலும், கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலும் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் ரயில்வே காவல் துறையினர் வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் ரயில்வே கேட்டை ஊழியர்கள் மூடினர். ரயில்வே மேம்பாலப் பணி மந்தமாக நடந்து வருவதே இந்த நெரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.