சென்னை, அக்.22 சென்னை விமானநிலையம் சென்னை நகருக்கு மேலும் ஒரு வணிக வளாகத்தை கொண்டு வந்துள்ளது. திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக கடைகள் என பல விதமான பொழுது போக்கு அம்சங்களுடன் சென்னை விமான நிலையத்தில் ஏரோஹப் எனப்படும் புதிய வணிக வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமான தொழிலில் முன்னணியில் உள்ள ஒலிம்பியா குழுமம் மற்றும் மெர்லின் குழுமம், இந்திய விமான நிலைய ஆணை யத்துடன் இணைந்து இதனை உரு வாக்கியுள்ளன. சமீபத்தில் இதனை ஒலிம்பியா குழும தலைமை செயல் அதிகாரி ஏ.ஜே.பாலாஜி – முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா திறந்து வைத்தார். புதிய ஏரோஹப் வணிக வளாகம் என்பது நாடு முழுவதும் இருந்து வரும் விமானப் பயணிகள் வந்து செல்லும் இடமாகத் திகழும். இந்த புதிய வணிக வளாகத்தின் வடிவமைப்பு மற்றும் உள்புறம் புகழ்பெற்ற ஆர்.எஸ்.பி. இந்தியா (வடிவமைப்பு ஆலோசகர்கள்) கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு ஈர்க்கப்பட்டுள்ளது. புதிய வணிக வளாகம் சுமார் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இரண்டு உணவு கூடங்கள், 100-க்கும் மேற்பட்ட பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்கள், 5-க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு வசதி மற்றும் 2500-க்கும் மேற்பட்ட கார்கள், டூ வீலர்களை நிறுத்த முடியும். இந்த வசதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மல்டிலெவல் கார் நிறுத்தம் என விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் திறந்திருக்கும் உணவகம், சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு வகைகள் ஆகியவை விமான பயணிகளுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று வணிக வளாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.