புதுச்சேரி, மே 8- புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவரும், மறைந்த முன்னாள் கவுர தலைவருமான சி. எச். பாலமோகனனின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதனன்று நடைபெற்றது. பாலமோகனனின் நினைவு தினத்தையொட்டிபுதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்று ரத்தம் வழங்கினர்.அதேபோல்புதுச்சேரி வாழைக்குளம் அங்கன்வாடி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாகிகள் சண்முகம், சீதாராமன், கீதா, கிறிஸ்தோபர், வின்சென்ட்ராஜ், ஆனந்த கணபதி ஞானசேகர், சிவஞானம், முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கருவடி குப்பம் இடுகாட்டில் அமைந்துள்ள பாலமோகனின் சமாதிக்கு சம்மேளன தலைவர்கள், அரசு ஊழியர்கள் மலரஞ்சலியும் சம்மேளன அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.