கள்ளக்குறிச்சி, பிப்.17- மலைக்குறவன் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியிடம் மலைகுறவன் பழங்குடியின முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், வாசுதேவநல்லூர் அலம்பலம், குறால்,பாக்கம்பாடி ,அம்மையகரம் ஆகிய கிராமங்களில் இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்ற மலைகுறவன் பழங்குடியினர் மக்களின் பிள்ளைகள் மேற்படிப்பு உயர்கல்வி பெறவும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறவும் வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்ய சாதிச் சான்று கட்டாயம் தேவைப்படுகிறது. இந்நிலையில் சாதிச் சான்று இல்லாத காரணத்தால் இந்த சமூக மக்கள் அரசு பணிகளுக்கு செல்லவும், வேலைவாய்ப்புகளை பெறவும் இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. சாதிச்சான்று பெற முன்னோர்களின் ஆவணங்களான சாதி சான்றிதழ் அடையாளப்படுத்தி மனுக்கள் கொடுத்திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மலைக்குறவன் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று உடனே வழங்க கோரி கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு, மாநில துணைத்தலைவர் ஏ.வி. சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வே.ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மலைக்குறவன் பழங்குடியினர் முன்னேற்ற சங்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆர்.தனபால், பி.மனோகரன், டி.ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆர். முருகேசன், ரவிச்சந்திரன், முருகன், இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் 10 தினங்களுக்குள் ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.