districts

img

போதைக்கு எதிராக திருவள்ளூரில் வாலிபர் சங்கம் பிரச்சார பயணம்

திருவள்ளூர், ஜூன் 18-

     போதைப் பொருட்களை தடை செய்ய  வலியுறுத்தி திருவள்ளூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (ஜூன்-18) இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் துவங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் கடப்பாக்கம், தத்தமஞ்சி, காட்டூர், திருவெள்ளவாயல், வாயலூர், மெரட்டூர், நெய்தவாயல், மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 40 கி.மீ, தூரம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிராமங்களில் வேலையின்றி உள்ள இளைஞர்கள் இதனால் அதிகம் பாதிக்கின்றனர். இதனை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் சார்பில் கடந்த பிப் 12 அன்று போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவங்கியுள்ளது.

     திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் பேரிடமும் மாநிலம் முழுவதும் சுமார் 1கோடிபேரிடமும் கையெழுத்து  பெற்று,  ஜூலை 2 அன்று  தமிழ்நாடு முதலமைச்சரிடம் கொடுக்க வாலிபர் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான இயக்கமும் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக பழவேற்காட்டில் ஞாயிறன்று (ஜூன் -18) விழிப்புணர்வு பிரசாரம் துவங்கியது.

    இந்த பிரச்சாரத்தை வாலிபர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.மதன், மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சைந்தவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் சிவா, பொருளாளர் அகிலன், சிஐடியு மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் ஒன்றிய தலைவர் வே.விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.பிரச்சாரத்தின் நிறைவாக மீஞ்சூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.